கொவிட்-19: வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு

கொவிட்-19: வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு

2 mins read
6066fdb5-face-4363-a2a4-5a8a3d68a056
ஊழியர்களே உடலை தகனச் சாலைக்கு எடுத்துச் சென்று எரியூட்டும் நிலை. படம்: ஏஎஃப்பி -

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த இந்திய நாட்டவரின் உடல் கிட்டத்தட்ட 1 மணி நேரமாக ஆம்புலன்சுக்கு உள்ளேயே வைத்து, உறவினர்கள் அல்லது நண்பர்களின் வருகைக்காக காத்திருந்தனர் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள்.

யாரும் வராததால், அவர்களே உடலை தகனச் சாலைக்கு எடுத்துச் சென்று எரியூட்ட வேண்டியதாயிற்று.

தகனச் சாலையில் சேகரிக்கப்படும் அஸ்தி, உறவினர்கள் அங்கிருந்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்; இல்லையேல் அங்கிருக்கும் இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்படும்.

ஐக்கிய அரபு மற்றும் வளைகுடா நாடுகளின் மருத்துவமனைகள், வங்கிகள், கட்டுமானத் துறைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் மில்லியன் கணக்கான வெளிநாட்டினர் பணியாற்றுகின்றனர்.

பல ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து குடும்பத்துக்கு பணம் அனுப்பும் அவர்கள், ஒரு நாள் தாயகம் திரும்பி வீடு கட்டவோ அல்லது தொழில் தொடங்கி எஞ்சிய காலத்தை உறவினர்களுடன் கழிக்கவோ விருப்பம் கொண்டிருப்பர்.

ஆனால், உலகையே அச்சுறுத்தும் கொரோனா கிருமியால் பலரது கனவுகள், கனவுகளாகவே போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு அங்கேயே இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டிய கட்டாயம்.

வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பலியானவர்களில் பெரும்பாலோனர் வெளிநாட்டு ஊழியர்கள் என்று சுகாதார அமைச்சுகள் தெரிவிக்கின்றன.

இங்குக் கிருமித் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து 26,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் மாண்டனர் என்று கூறப்படுகிறது.

கிருமித்தொற்றுக்குப் பலியானவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறப்படும் நிலையில், அவர்களது சடலங்கள் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்படுவது இல்லை.

அவர்களது இறுதிச் சடங்குகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என யாரும் இல்லாமலேயே நடைபெறுகிறது.

"உலகம் மாறிவிட்டது. மாண்டவர்களை 'அனுப்பிவைக்க' யாரும் வருவதில்லை," என்றார் துபாயின் தெற்கு பகுதியில் உள்ள இந்து தகன பூமியின் மேலாளர் ஈஸ்வர் குமார்.

கிருமித்தொற்று கண்ட ஒருவருடன் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய நாட்டவரான, 45 வயதான ராம் என்பவர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்; தனியாக இருந்த மன உளைச்சல் தாங்காமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது சகோதரர் விஜய் தெரிவித்தார்.

சலவைத் தொழில் செய்துவந்த அவர் 14 நாட்களுக்குத் தனிமையில் இருந்த பிறகு அவருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவரது சகோதரர் விஜய், ராமின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனான ராம், ஆம்புலன்சில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்தியா விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளதால், கிருமித்தொற்று தவிர வேறு காரணங்களால் இறந்தவர்களின் உடல்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus

குறிப்புச் சொற்கள்