மக்கள் பசி, பட்டினியால் வாடும் நெருக்கடிநிலை உருவாகக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
அதனைத் தடுக்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அது பஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் இறப்பவர்களைவிட கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிகமான மக்கள் இறக்கக்கூடிய ஆபத்து நிலவுவதாகவும் உலக உணவுத் திட்ட நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி சொன்னார்.
கிருமித் தொற்று அச்சம் தொடங்குவதற்கு முன்பே, “2020ஆம் ஆண்டில் உலகம் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும்,” என்று ஐநாவிடம் அவர் கூறியிருந்தார்.
சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போர், ஆப்பிரிக்காவில் விவசாய நிலத்தைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள், அடிக்கடி நிகழும் இயற்கை பேரழிவு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றின் காரணமாக அவ்வாறான நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
உலகம் முழுவதும் சுமார் 821 மில்லியன் பேர் ஒவ்வோர் நாளும் பசியோடு உறங்கச் செல்வதாகக் கூறிய அவர், நிலைமை மோசமடையும்போது மேலும் 135 மில்லியன் மக்கள் அதே நிலையை எதிர்கொள்வதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கிருமித்தொற்று நெருக்கடியால் 2020ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், இன்னும் கூடுதலாக 130 மில்லியன் மக்கள் பசியின் விளம்பிற்குத் தள்ளப்படுவார்கள் என்கிறது உலக உணவுத் திட்டத்தின் புதிய ஆய்வு.
“ஒவ்வோர் நாளும் நாங்கள் சுமார் 100 மில்லியன் பேருக்கு உணவு வழங்கி வருகிறோம். அவர்களில் 30 மில்லியன் மக்கள் உணவுக்காக முற்றிலும் எங்களையே சார்ந்துள்ளனர்,” என்றார் பீஸ்லி.
அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லையென்றால் மூன்று மாத இடைவெளியில் சுமார் 300,000 பேர் பசியால் இறக்கக்கூடும் என்று தங்களுடைய ஆய்வு காட்டுவதாகவும் அவர் சொன்னார்.