தோக்கியோ: ஜப்பானில் கைக்குழந்தைகளுக்கான ஒரு பராமரிப்பு நிலையத்தில் பராமரிப்பில் உள்ள 29 பிள்ளை களில் எட்டு பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பதாக நேற்று அந்த நிலையத்தை நடத்தும் சாய்செய்க்காய் என்ற மருத்துவமனை தெரிவித்தது.
இதனிடையே, 623 ஊழியர்களுடன் பழுது பார்க்க வந்த கோஸ்டா அட்லாண்டிகா என்ற இத்தாலிய உல்லாச பயணிகள் கப்பலில் 33 பேருக்கு கொரோனா கிருமி தொற்றி இருக்கிறது என்று நாகசாகி மாநிலம் தெரிவித்தது.
ஜப்பான் வந்துள்ள அந்தக் கப்பலில் உள்ள ஊழியர்களிடம் மேலும் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், கிருமித்தொற்றைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் அரசாங்கம் விநியோகிக்கும் துணியாலான பாதுகாப்பு முகக்கவசங்கள் சுகாதாரமாக இல்லை, அவற்றில் பூச்சிகள் ஓடுகின்றன, பொருத்தமாக இல்லை என புகார் தெரிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

