சிட்னி: கொரோனா கிருமித் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமாக, ஆஸ்திரேலியாவில் மற்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அனைத்துலக எல்லைகள் மேலும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
"தற்போதைய அனைத்துலக நிலவரப்படி, எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்துவது மிகவும் ஆபத்தானது," என்றார் ஆஸ்திரேலிய தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மர்பி.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்கள் அனைவரும் சிங்கப்பூரில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தொடர்பு தடமறிதல் செயலியை பயன்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன்.
ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், செயலி பயன்பாடு அந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க உதவும் என்கிறார் மோரிசன்.
ஆனால் மோரிசனின் இந்த விருப்பம் அங்குச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செயலி பயன்பாடு தேவையற்ற ஒன்று என்றும் அது ஒருவரின் தனியுரிமை பற்றிய கவலைகளை எழுப்புவதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்சம் 40 விழுக்காட்டு அளவிற்குச் செயலியைப் பயன்படுத்த விரும்பும் அவர், அது தற்போதைய முடக்க நிலையை விரைவில் தளர்த்த உதவும் என்றார்.
ஆஸ்திரேலியாவில் புதன்கிழமை நிலவரப்படி 6,652 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 74 பேர் மாண்டுவிட்டனர்.
செவ்வாயன்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

