கொள்ளை நோயாக உருவெடுத்துள்ள கொரோனா கிருமி, சூரிய ஒளி, அதிகமான வெப்பம், வெப்ப மண்டலத்தின் ஈரப்பதம் ஆகிய சூழலில் சீக்கிரம் அழியும் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசகரான பில் பிரையன், வெள்ளை மாளிகையில் இது குறித்த தகவலை வெளியிட்டார்.
சூரிய ஒளியால் வெளிப்படும் புற ஊதா கதிர்கள், கொரோனா கிருமியை அழிப்பதில் பங்கு வகிப்பதாகவும் அதனால் வெயில் காலத்தில் கொரோனா கிருமித்தொற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ஒரு பொருளின் மீதோ அல்லது காற்றிலோ இருக்கும் கொரோனா கிருமியை சூரிய வெளிச்சம் அழிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“அதேபோல ஒரு இடத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது ஈரப்பதம் குறைந்தாலோ அது கிருமிப் பரவலுக்குச் சாதகமான சூழலாக இருக்கவில்லை,” என்று விளக்கினார் வில்லியம்.
அதே நேரத்தில், “வெயில் காலம் வரவுள்ளதால் அது கிருமியை முற்றிலும் அழித்துவிடும் என்ற முடிவுக்கு வரக் கூடாது. இந்த ஆய்வு முடிவில்கூட, கிருமி சூரிய வெளிச்சத்தினால் மட்டும் முற்றிலும் அழிந்துவிடும் என்று சொல்லப்படவில்லை. எனவே, தொடர்ந்து சமூக விலகலையும் கட்டுப்பாடுகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கு முன்னர் கொரோனா கிருமி குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளும் அது மிகவும் குளிரான சூழலில் வேகமாக வளர்ந்ததையும் மிகவும் வெப்பமான சூழலில் அந்தளவுக்கு வளர முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டின.
இதற்கு எடுத்துக்காட்டாக, மிகவும் வெப்பமான தட்பவெப்ப சூழலைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் 7,000 பேருக்கு மட்டுமே கொரோனா கிருமிப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் 77 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தனர்.
பிரையனின் இந்த விளக்கத்திற்குப் பிறகு, இது தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
‘சருமத்தின் வழியாகவோ அல்லது வேறு வழியிலோ உடலில் வெளிச்சத்தை கொண்டு செல்ல முடியுமா’ என்பதை ஆராய வேண்டும் என்று டிரம்ப் பிரையனிடம் சொன்னார்.
ஆனால், உடலின் எந்தப் பகுதியையும் கிருமி நீக்கம் செய்ய புற ஊதா கதிர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்துள்ள உலக சுகாதார நிறுவனம் அது தோலில் எரிச்சலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
சரியாகக் கையாளாவிட்டால் புறா ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்கு ஆபத்து விளையக்கூடும் என்று வல்லுநர்கள் பலகாலமாக எச்சரித்து வருகின்றனர்.
அதேபோல, பிளீச் போன்ற கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்தினால் அவை கிருமிகளை மட்டுமின்றி மனிதர்களையும் கொல்லக்கூடியவை என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.