ஹாங்காங்: கொவிட்-19 கிருமி நெருக்கடி காரணமாக பல மாதங்களாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த ஹாங்காங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நேற்று தங்களது இறுதித் தேர்வை எழுதினர்.
கொள்ளை நோய் கொடூரம் தணியாத நிலையில் பள்ளி இறுதித் தேர்வை எழுதிய மாணவர்கள் உலகிலேயே இவர்கள் மட்டும்தான் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. உயர்நிலைக் கல்வி பட்டயத் தேர்வுகள் நான்கு வார தாமதத்திற்குப் பின்னர் நேற்று தொடங்கின. ஹாங்காங்கில் கொவிட்-19 கிருமி நிலவரம் மேம்பட்டதைத் தொடர்ந்து தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். ஒவ்வொருவரின் உடல்வெப்பமும் பரிசோதிக்கப்பட்டது. சமூக இடைவெளியையும் அவர்கள் கடைப்பிடித்தனர். ஹாங்காங்கில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,036. வியாழக்கிழமை இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கடந்த திங்கட்கிழமை அங்கு ஒருவருக்குக்கூட கிருமித்தொற்று ஏற்படவில்லை. இதுவரை நான்கு பேர் மாண்டுவிட்டனர். அதனைத் தொடர்ந்து உலகளவில் கிருமியால் ஆகக் குறைந்த உயிர்ப்பலி நிகழ்ந்த இடங்களுள் ஒன்றாக ஹாங்காங் கருதப்படுகிறது.

