தோக்கியோ: கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நடப்பில் இருக்கும் அவசரநிலையை நீட்டிப்பதற்கான அவசியம் குறித்து ஜப்பானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சில தகவல்களை மேற்கோள் காட்டி புளூம்பெர்க் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
சமூகத்தினிடையே கிருமித்தொற்று சம்பவங்களைக் குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை மூன்று வாரத்தை எட்டியுள்ளது.
மே 6ஆம் தேதி வரை அவசரநிலை நடப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய கிருமித்தொற்று சம்பவங்கள் முன்னேற்றத்திற்கான அறிகுறியை வெளிப்படுத்தாததால் மே 6க்குப் பிறகும் அவசரநிலையை நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான என்எச்கே தெரிவித்தது. ஆனால் அதற்கு ஆதாரமாக எந்தவொரு தகவலையும் அது குறிப்பிடவில்லை.
தலைநகர் தோக்கியோவிலும் ஒசாக்கா நகரிலும் அன்றாடம் பதிவாகும் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவுக்கு அந்த வீழ்ச்சி இல்லை என்று நிபுணர்கள் கருதுவதாக என்எச்கே கூறியது.
எடுத்த எடுப்பில் அவசரநிலையை தீவிரப்படுத்த விரும்பாத ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே, ஏப்ரல் 8ஆம் தேதி ஏழு வட்டாரங் களுக்கு மட்டும் அதனை அமல்படுத்த உத்தரவிட்டார். பின்னர் நாடுமுழுவதும் அது விரிவுபடுத்தப்பட்டது.
பல பகுதிகளில் கிருமிப் பரவல் குறைந்து வந்தபோதிலும் தோக்கியோவில் ஒவ்வொரு நாளும் பதிவாகும் சம்பவங்களின் எண்ணிக்கை நூறுக்குக் குறையாமல் உள்ளது. கடந்த இரு வாரங்களாக அந்நகரில் இதே நிலைமை நீடிக்கிறது.
சனிக்கிழமை அங்கு 103 சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து தோக்கியோ முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,836 ஆக உயர்ந்தது. ஜப்பானில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தோக்கியோவில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தோக்கியோவில் மாண்டோர் எண்ணிக்கை நூறைத் தொட்டுவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில் அவசரநிலையை நீட்டிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்று அதிகாரிகள் கருதுவதாக ஜிஜி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இருப்பினும் அந்த நீட்டிப்பு எதுவரை இருக்கும் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவுவதாகவும் அது குறிப்பிட்டது.
மே 6ஆம் தேதிக்குப் பிறகு மேலும் ஒரு வாரத்திற்கு அவசரநிலை நீட்டிக்கப்படலாம் என்று ஒருசாராரும் மே மாதம் முழுவதுக்கும் அது நீடிக்கக்கூடும் என்று வேறு சில அதிகாரிகளும் கூறுவதாக ஜிஜி செய்தி தெரிவித்தது.
இதற்கிடையில், தமது அமைச்சில் அலுவலர் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாம் இல்லத்தனிமையில் இருப்பதாக ஜப்பானிய பொருளியல் அமைச்சர் யாசுடோஷி நிஷிமுரா நேற்று முன்தினம் கூறினார்.

