கொழும்பு: இலங்கையில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மார்ச் 20 ஆம் தேதி முடக்க நிலை அறிவிக்கப்பட்டது. நாளை முடிவுறவிருக்கும் முடக்கநிலையை மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.
கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பு நகரில் 81 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. வெளிசாரா கடற்படைத் தளத்தில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிசாராவில் 4,000க்கு மேற்பட்ட கடலோடிகளும் அவர்களின் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். சென்ற வாரம் 30 கடலோடிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். இலங்கையில் 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொவிட்-19 ஏழு பேரின் உயிரைப் பறித்துள்ளது.

