மேட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிராக மார்ச் மாதம் மத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கு நிபந்தனைகளில் சிலவற்றை அந்நாட்டின் அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
குறிப்பாக 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் முதல் முறையாக நேற்று தளர்த்தப்பட்டன.
நாட்டில் உள்ள பதினான்கு வயதுக்கு உட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகள் நாள்தோறும் காலை 9 மணியிலிருந்து இரவு 9.00 மணிக்குள் ஒரு மணி நேரம் வெளியே செல்லலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு மேல் செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் ஓட்டலாம், சாலைகளில் சறுக்குப் பலகைகளில் ஏறி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் பொழுதைக் கழிக்க முடியாமல் வீடியோ விளையாட்டுகளையும் கைபேசி செயலிகளிலும் விளையாடி வெறுத்துப் போயிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு புதிய தெம்பு ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் ஓரளவு நேற்று தளர்த்தப்பட்டதும் வெளியே சிறார்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து மகிழ்ந்தனர்.
வரும் மே மாதம் மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.
குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை மனோவியல் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேர மாவது வெளியே செல்ல அனுமதிப்பது நொந்து போயிருக்கும் சிறுவர்களுக்கு பெரும் மனமாற்றத்தைத் தரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
"இருட்டில் இருப்பதைவிட்டு சூரிய வெளிச்சத்தில் நடமாடுவது மிகவும் முக்கியம்," என்று மேட்ரிட் நகர மனோவியல் நிபுணரான லாரா பினேரோ தெரிவித்தார்.
"நாற்பது சதுர மீட்டர் வீட்டில் வசிக்கும் மக்களும் உள்ளனர். அவர்களுக்கு போதுமான காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்காது. இப்படி வரம்புக்கு உட்பட்ட இடத்தில் வசிக்கும் மக்கள் வெளியே சூரிய வெளிச்சத்தைப் பார்த்தாலே புத்துணர்வு ஏற்படும்," என்று அவர் கூறினார்.

