இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மக்களுக்கு இடையே சமூக இடைவெளியை உறுதிசெய்யும் விதமாக அம்மாநிலத்தில் கிராமப் பஞ்சாயத்து ஒன்று புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
ஆலப்புழா பகுதியில் வசிக்கும் அனைவரும் வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடைபிடித்துச் செல்வதன் மூலம் ஒருவர் மற்றொருவருடன் நெருங்கி நிற்பதைத் தவிர்க்க முடியும் என்றும் இரு நபர்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி பேணப்படும் என்றும் அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கேரளா முழுவதும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படும் என்றும் அனைத்து குடும்பத்தினருக்கும் மலிவு விலையில் குடைகள் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கையைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.


