சவூதி அரேபியாவில் குறைந்த வயதுடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முறையை ரத்து செய்துள்ளதாக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அவ்வாத் அலவ்வாத் கூறியுள்ளார்.
அதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா. பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
சவூதியில் கடந்த ஆண்டு மட்டும் குறைந்தது 187 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபிய பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்றது முதல் அங்கு பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முறையை நீக்கி பட்டத்து இளவரசரின் தந்தையான மன்னர் சல்மான் தற்போது உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரம்படிகள் விதிக்கப்படும் குற்றங்களுக்கு, அந்த தண்டனைக்குப் பதிலாக சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2018ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.


