ரோம்: கிட்டதட்ட ஒன்றரை மாதமாக முடக்கப்பட்டுள்ள இத்தாலியில் மே நான்காம் தேதி முதல் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அதன் பிரதமர் ஜிசுப்பே கோன்டே அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆக அதிகமானோரைப் பலி கொடுத்த இத்தாலியில், கடந்த சில வாரங்களாக மாண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கோன்டே இம்முடிவை எடுத்துள்ளார்.
மார்ச் 14ஆம் தேதிக்குப் பிறகு, நேற்று முன்தினம் ஆகக் குறைவாக 260 பேர் மாண்டனர்.
இந்நிலையில் மே நான்காம் தேதி முதல் பொதுமக்களுக்கு பூங்காக்கள் திறந்து விடப்படவுள்ளன. தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளன.
மக்கள் தங்கள் வட்டாரத்திற்குள்ளேயே நடமாட அனுமதிக்கப்
படுவர். உணவகங்கள், மதுபானக்கூடங்களில் இருந்து வீட்டிற்கு உணவு, பானங்கள் வாங்கிச் செல்லாம்.
வரும் மே 19ஆம் தேதி முதல் அருங்காட்சியகம், நூலகங்கள் செயல்படும். ஜூன் 1ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பள்ளிகளுக்கு செப்டம்பர் மாதம் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இதுவரை 197,675 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது. 26,644 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதற்கிடையே, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.
ஸ்பெயினில் நேற்று முன்தினம் குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து வரும் 2ஆம் தேதி முதல் வெளிப்புற உடற்பயிற்சிக்கு அனுமதியளிக்கப்படக்கூடும்.
ஜெர்மனியில் ஏற்கெனவே இயல்பு நிலை ஓரளவு திரும்பியுள்ள நிலையில், பிரான்ஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான திட்டத்தை இன்று அறிவிக்கும்.
சுவிட்சர்லாந்தில் ஏற்கெனவே சில வர்த்தக நிறுவனங்கள் மட்டும் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 11ஆம் தேதி முதல் அனைத்து சில்லறை வர்த்தகங்களும் செயல்படத் தொடங்கும். மேலும் அங்குத் தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன.

