பாரிஸ்: கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பல வாரங்களாக மக்களைக் கட்டுப்படுத்தி வைத்துள்ள முடக்கநிலையைத் தளர்த்த பிரான்சும் ஸ்பெயினும் தயாராகி வருகின்றன. அதற்கான திட்டங்களைத் தயாரிப்பதில் அவை மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. உலக அளவில் கிருமித்தொற்று ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இவை இரண்டும் உள்ளன.
மரண விகிதம் படிப்படியாகக் குறைந்து வருவதால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகின்றன. அமெரிக்காவின் பல மாநிலங்கள் பொருளியலை மீட்டெடுக்கும் முயற்சியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. அதேபோல ஐரோப்பாவின் சில வட்டாரங்களில் பள்ளிக்கூடங்களும் கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. அடுத்த வாரம் முதல் இத்தாலியும் கதவுகளைத் திறக்க உள்ளது. பொதுமக்கள் வெளியில் சென்று உறவினர்களைச் சந்திக்கலாம் என்றபோதிலும் கைகுலுக்குவதும் கட்டிப்பிடிப்பதும் கூடாது என்று இத்தாலிய அரசாங்கம் தெரிவித்து உள்ளது. வெளியில் இருக்கும் எல்லா நேரங்களிலும் முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்பதும் அதன் உத்தரவு.
ஸ்பெயின் தனது கட்டுப்பாட்டுத் தளர்வு திட்டத்தை எந்நேரத்திலும் அறிவிக்கக்கூடும். அதேநேரம் மே 11 முதல் கட்டுப்பாடுகளை தளர்த்த தயாராகி வருவதாக பிரான்ஸ் தெரிவித்து உள்ளது.

