பெய்ஜிங்: கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை உலகளவில் மூன்று மில்லியனைக் கடந்துவிட்டது. திங்கட்கிழமை பின்னேரத்தில் அந்த எண்ணிக்கை 3,003,344 ஆக இருந்தது என்றும் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறி உள்ளது.
உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரில் மூன்றில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்ற விவரத்தை வெளியிட்ட ராய்ட்டர்ஸ், 987,022 பேர் அங்கு பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்துகொண்டே செல்கிறது என்றும் செவ்வாய்க்கிழமை அது ஒரு மில்லியனைக் கடந்துவிடும் என்றும் குறிப்பிட்டது.
திங்கட்கிழமை நிலவரப்படி அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் ஸ்பெயினில் 229,422, இத்தாலியில் 199,414, பிரான்சில் 165,962, ஜெர்மனியில் 158,434 என கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
உலகளாவிய கிருமித்தொற்று சம்பவங்கள் இதுவரை காணாத அளவிற்குக் கடந்த வாரம் அதிகரித்தன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 82,000 கிருமித்தொற்று சம்பவங்கள் கடந்த வாரம் பதிவாயின. இவற்றில் 43% ஐரோப்பாவிலும் 25% அமெரிக்காவிலும் காணப்பட்டன.
பாதிக்கப்பட்டோர் நிலவரம் இவ்வாறிருக்க, உலகில் கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை திங்கட்கிழமை 210,800 ஆனது.
ஆனால், உலகளவிலான கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் மிதமான அறிகுறி காணப்பட்டோரும் அறிகுறி காணப்படாமலேயே பாதிக்கப்பட்டோரும் இந்தக் கணக்கில் அடங்கவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
கொரோனா கிருமித்தொற்று கடந்தாண்டு இறுதியில் உருவானதாகச் சொல்லப்பட்டாலும் இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி சீனாவின் வூஹான் நகரில் 41 பேர் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டதே முதல் சம்பவமாகப் பதி வானது.
உலக அளவில் ஆண்டுதோறும் சளிக்காய்ச்சலால் மூன்று மில்லியன் முதல் ஐந்து மில்லியன் பேர் வரை பாதிக்கப்படுவது வழக்கம் என்றும் கொரோனா கிருமியால் நான்கு வாரங்களில் மூன்று மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

