பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் திருவாட்டி கேரி சைமன்ட்ஸ் ஆகியோருக்கு இன்று (ஏப்ரல் 29) லண்டனில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயும் சேயும் நலம்.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட 55 வயதான திரு ஜான்சன் குணமடைந்த பிறகு கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 27) பணிக்குத் திரும்பினார். கொவிட்-19 பாதிப்பு கடுமை காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
32 வயதான திருவாட்டி சைமன்ட்சுக்கும் கொவிட்-19 அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அவர் விரைவில் குணமடைந்துவிட்டார்.
திரு ஜான்சன் பிரதமரான பிறகு, தம்பதியர் டிரௌனிங் ஸ்திரீட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். திருவாட்டி சைமன்ட்ஸ் கருவுற்றிருப்பது குறித்து கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.
குழந்தை பிறந்திருப்பதையடுத்து உலகத் தலைவர்கள் பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமக்கு எத்தனை பிள்ளைகள் என்பதைத் தெரிவிக்க மறுக்கும் திரு ஜான்சனின் முன்னாள் மனைவி மரினா வீலர் மூலம் திரு ஜான்சனுக்கு 4 பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரிந்துவிட்டதாகத் தெரிவித்த இந்தத் தம்பதிக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் விவாகரத்தானதாகத் தெரிவிக்கப்பட்டது.