கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தையும் காஷ்மீர் விவகாரத்தையும் விமர்சித்ததால் இந்தியா சினமடைந்தது.
இதற்குப் பதிலடியாக மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதியை இந்தியா வெகுவாகக் குறைத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது.
இதற்கிடையே மலேசியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பு ஏற்ற முகைதீன் யாசின் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டினார்.
இதில் ஓரளவு பலன் கிட்டியது. இந்தியா மீண்டும் செம்பனை எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க சம்மதித்தது. இதையடுத்து ஜூன், ஜூலையில் 200,000 டன் செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு மலேசியாவுடன் இந்திய வியாபாரிகள் ஒப்பந்தம் செய்தனர்.
மலேசியாவிலிருந்து ஆக அதிக அளவு செம்பனை எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ஆனால் இவ்வாண்டு முற்பகுதி யில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
"ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரையில் இந்தியாவுக்கான மலேசிய செம்பனை ஏற்றுமதி 96,145 டன்னுக்கு குறைந்தது," என்று கூறிய மலேசிய அமைச்சர் முஹமட் கைரூடீன் அமான் ரஸ்லி, இது, 2019ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 94% சரிவு என்றார்.
உலகிலேயே அதிக அளவு செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆனால் செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் மலேசியாவுக்கு இந்தோனீசியா போட்டியாக விளங்குகிறது.
இதனை சமாளிக்க ஜூன் மாதத் திற்கான செம்பனை எண்ணெய் ஏற்றுமதி வரியை மலேசியா முற்றிலும் அகற்றியது.
இந்தச் சூழ்நிலையில் மலேசியாவும் இந்தியாவிலிருந்து சாதனை அளவாக 100,000 டன் அரிசியை இறக்குமதி செய்ய முன்வந்துள்ளது. இரு நாடுகளும் தற்போது நெருக்கமாக செயல்பட்டு வருவதால் இருதரப்பு உறவு மேலும் வலுவடை யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

