கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த பயணிகளில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அந்த விமானத்தில் 99 பயணிகளும் எட்டு விமான ஊழியர்களும் இருந்தனர்.
“107 ேபருடன் பிகே8303 விமானம் விபத்துக்குள்ளானது,” என்று தேசிய விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சம்பவ இடத்துக்கு ராணுவப் படையும் மீட்புப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
உள்ளூர் தொலைக்காட்சி ஒளி பரப்பிய காட்சியில் விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் ஏராளமானோர் கூடியிருப்பதைக் காண முடிந்தது.
மக்கள் நெரிசல்மிக்க பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த இடமே கரும்புகையாகக் காட்சியளித்தது.
“விபத்தில் எத்தனை பேர் இறந்துவிட்டனர் என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடிய வில்லை.
“ஆனால் விமானத்தில் 99 பயணிகளும் எட்டு சிப்பந்திகளும் இருந்தனர்,” என்று நேற்று பிற்பகல் அந்த பேச்சாளர் தெரிவித்தார்.
லாகூரிலிருந்து கராச்சியை நோக்கிச் சென்ற விமானம், ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தை நெருங்கும்போது விபத்துக்குள்ளானது என்று அவர் கூறினார்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் விமான விபத்தில் பல பேர் கொல்லப் பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.