பெய்ஜிங்: ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஹாங்காங்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீன கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு வருகிறது.
இதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றும் முயற்சியில் அது இறங்கியுள்ளது.
இது, ஹாங்காங்கின் நிலைத்தன்மையை கீழறுத்துவிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
“ஹாங்காங் மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு தேசிய பாதுகாப்புச் சட்டமும் ஹாங்காங்கின் நிலைத்தன்மையை சீரழித்துவிடும்,” என்று கூறிய அமெரிக்க வெளியுறவு அமைச்சின் ேபச்சாளர் மோர்கன் ஓர்டாகுஸ், அமெரிக்கா மற்றும் அனைத்துலக சமூகத்தின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக நேரிடும் என்றார். கடந்த 1997ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஹாங்காங்கின் தன்னாட்சியில் தலையிடப் போவதில்லை என்று சீனா வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் தற்போது அதனை மீறும் வகையில் உத்தேச தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வருகிறது என்று திரு மோர்கன் கூறினார்.