கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்துக்குச் சென்றுள்ளது பிரேசில்.
அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்து வருவதால் 12 மணி நேரம் பணிபுரிந்தும் சடலங்களைப் புதைக்கும் பணியை முடிக்க முடியவில்லை என்று அங்கு கல்லறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் 330,890 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 22,013 பேர் உயிரிழந்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 1,001 பேர் அங்கு உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பிரேசிலில் கிருமிப்பரவலை திறம்பட கட்டுப்படுத்தாததைக் குறிப்பிட்டு அதிபர் ஜேர் போல்சொனாரோ கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
முன்பு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்று பதிவான நாடாக ரஷ்யா இருந்தது. தற்போது 344,481 கிருமித்தொற்று சம்பவங்களுடன் மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ளது ரஷ்யா. ஆனால், ரஷ்யாவில் கொவிட்-19 உயிரிழப்புகள் குறைவாகவே பதிவாகியுள்ளன; 4,541 பேர் கொவிட்-19க்கு பலியாகியுள்ளனர்.
1,622,605 கிருமித்தொற்று சம்பவங்களுடன் அமெரிக்கா முதல் நிலையில் உள்ளது. அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100,000ஐ நெருங்குகிறது.
உலகம் முழுவது 5.4 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 340,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் கிருமித்தொற்றிலிருந்து மீட்சியடையும் நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் தற்போது தென் அமெரிக்கா கிருமித்தொற்றின் புதிய மையமாக உருவெடுத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால சேவைகளின் இயக்குநர் மைக் ரயன் நேற்று முன்தினம் கூறினார்.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வயதானவர்கள் பலர் கொவிட்-19க்கு பலியாகியுள்ள நிலையில், பிரேசிலில் உயிரிழந்த பலர் இளம் வயதினர் என்று கூறப்படுகிறது.
வறுமை காரணமாக பலரும் வேலைக்குச் செல்வது உட்பட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருப்பதாகவும் அவர்களால் அதனைத் தவிர்க்க இயலாது என்றும் கூறப்படுகிறது.