ஸ்டெர்லிங், வெர்ஜினியா: அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நாட்டில் வழக்க நிலை திரும்புகிறது என்பதைப் பறைசாற்றும் வகையில் நேற்று வாஷிங்டன் நகரின் புறப் பகுதியில் இருக்கும் டிரம்ப் தேசிய கோல்ஃப் மனமகிழ் மன்றத்துக்குச் சென்று கோல்ஃப் விளையாடினார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக மார்ச் மாதம் தேசிய அளவிலான அவசரநிலையை அதிபர் பிறப்பித்தார். அதற்குப் பிறகு முதன்முதலாக நேற்றுதான் அவர் வெள்ளை மாளிகைக்கு வெளியே சென்று கோல்ஃப் விளையாடினார்.
அதிபர் வெள்ளை நிற உடையும் தொப்பியும் அணிந்திருந்தார்.
அதிபர், இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் புளோரிடாவில் இருக்கும் வெஸ்ட் பாஃம் கடற்கரை அருகே உள்ள கோல்ஃப் மனமகிழ் மன்றத்துக்குச் சென்று கோல்ஃப் விளையாடினார்.
அதே வாரத்தில்தான் பிரேசில் அதிபர் போல்சோனாரோவை அதிபர் டிரம்ப் சந்தித்தார். பிரேசில் அதிபரின் செய்தித்துறைச் செயலாளருக்கு கொரோனா கிருமித் தொற்று இருந்தது பின்னர் தெரியவந்தது. அவருடன் தொடர்பில் இருந்த வெள்ளை மாளிகை ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பிறகு மார்ச் 13ஆம் தேதி கொரோனா கிருமித்தொற்று நிலவரத்தை மதிப்பிட்ட அதிபர், தேசிய அளவிலான அவசரநிலையை அறிவித்தார்.
அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் முதன்முதலாக ஒருவரைக் கொரோனா கிருமி தொற்றிவிட்டது என்று ஜனவரி 20ஆம்தேதி அறிவிக்கப்பட்டது.