ஜப்பான்: தோக்கியோவில் அவசரநிலை இன்று அகலுகிறது
தோக்கியோ: ஜப்பானில் கிருமித்தொற்று மட்டுப்பட்டு வருவதை அடுத்து, தலைநகர் தோக்கியோவிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் வடக்கே இருக்கும் ஹொக்கைடோ தீவிலும் நடப்பில் இருந்து வரும் அரவசரநிலை இன்று அகற்றப்படும் என்று உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
தோக்கியோவில் ஏப்ரல் 7ல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பிறகு அது நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டது.
விசாரணையை எதிர்நோக்கும் இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு
ஜெருசலம்: இஸ்ரேலிய வரலாற்றில் நேற்று புதிய அத்தியாயம் தொடங்க இருந்தது. பிரதமர் நெட்டன்யாகு வுக்கு எதிராக குற்றவியல் புகார்கள் மீதான விசாரணை நடக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் உள்ள பிரதமர் ஒருவர் ஊழல் விசாரணையை எதிர்நோக்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் ஆக அதிகமாக விற்பனையாகும் இடியோட் அஃரோனாட் என்ற செய்தித்தாளில், தன்னைப் பற்றி சாதகமான செய்திகள் வரவேண்டும் என்பதற்காக சட்டவிரோத வியாபார முறைகளைப் பிரதமர் கையாண்டு இருக்கிறார் என்பது அவர் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. ஆனால் தனக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளையும் பிரதமர் மறுக்கிறார்.
உலகப் போரில் உயிர் பிழைத்த முதலை 84வது வயதில் மரணம்
மாஸ்கோ: 2வது உலகப்போரின் போது 1943ல் ஜெர்மனி விலங்குக் காட்சிசாலையில் குண்டு விழுந்து வெடித்தது. அதில் உயிர் தப்பிய இந்த முதலை (படம்) இப்போது தனது 84வது வயதில் மரணமடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண் முதலையின் முடிவு, ஒரு யுகத்தின் முடிவு என்று மாஸ்கோ விலங்குக் காட்சிசாலை தெரிவித்தது. அமெரிக்காவில் 1936ல் பிறந்த இந்த முதலை, பெர்லின் விலங்குக் காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டது. பிறகு 1946ல் மாஸ்கோ விலங்குக் காட்சிசாலைக்குச் சென்றது.