செர்டாங்: மலேசியாவில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுவது குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடு கள் நடப்பில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி அந்தத் திருமணம் நடைெபற்றதாகக் கூறப்படுகிறது. இருபது முதல் முப்பது பேர் வரை பங்கேற்ற திருமண நிகழ்வை ஆரம்பத்தில் மறுத்த கோயில் நிர்வாகிகள் பின்னர் ஒப்புக் கொண்டதாக செர்டாங் உதவி போலிஸ் ஆணையர் இஸ்மாடி போர்ஹான் தெரிவித்தார். சென்ற ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணியிலிருந்து 10.00 மணி வரையில் திரு மணம் நடைபெற்றுள்ளது.
மறுநாள் திங்கட்கிழமை அன்று தாமான் செர்டாங் ராயாவில் உள்ள கோயிலுக்குச் சென்ற போலிஸ் ஆய்வாளர் ஒருவர் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் சொன்னார். “தொற்றுநோய் கட்டுப்பாட்டுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறோம். இதில் தொடர்புடையவர்களையும் தேடி வருகிறோம்.
சம்பவத்தைப் பற்றி 41 வயது ஆடவர் ஒருவர் தகவல் கொடுத்ததால் திருமண விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது,” என்று அவர் மேலும் சொன்னார்.
நாடு முழுவதும் கொரோனா கிருமி பாதிப்பு இல்லாத பச்சை நிற வட்டாரத்தில் உள்ள 84 கோயில்களும் ஜூன் 10ஆம் தேதியிலிருந்து வெள்ளிக் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் வழிபாட்டுக்குத் திறக்கலாம் என்று கடந்த சனிக்கிழமை மலேசிய இந்து சங்கம் அறிவித்திருந்தது.
என்றாலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை திருமணம் போன்ற நிகழ்வுகள் நடத்த அனுமதியில்லை என்றும் அது வலியுறுத்தியிருந் தது.