மணிலா: கொரோனா கிருமித்தொற்று எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பிலிப்பீன்சில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைத் தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கூறியுள்ளார்.
கிருமித்தொற்று காரணமாக பிலிப்பீன்சில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் திறக்கப்படவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதிபர் டுட்டர்டே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“நிலவரம் பாதுகாப்பான நிலை எட்டு வரை பள்ளிகளைத் திறப்பது குறித்து பேசுவது பயனற்றது.
“என்னை பொறுத்தவரை, கிருமித்தொற்று தடுப்பு மருந்துக்குத்தான் முன்னுரிமை. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் பள்ளிகளைத் திறக்கலாம். அதுவரை மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் பரவாயில்லை,” என்று நேற்று முன்தினம் அவர் கூறினார்.
முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் மும்முரமாக முயற்சி செய்து வந்தாலும், ஆக்ககரமான மருந்து ஒன்று எப்போது கண்டுபிடிக்கப்படும் என்றும் அது எப்போதும் உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் இப்போதைக்கு கணிக்க முடியாது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக உலகம் முழுவதும் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர்.