ஜெனிவா: கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் நாடுகளில் கட்டுப்பாடுகள் முன்கூட்டியே தளர்த்தப்பட்டால் கிருமித்தொற்று சம்பவங்கள் இரண்டாவது முறையாக உச்சத்தை எட்டக்கூடிய அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போது கொரோனா கிருமித்தொற்று முதல் அலையின் நடுப்பகுதியில் உலகம் இருப்பதாகக் கூறிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலப் பிரிவுத் தலைவர் டாக்டர் மைக் ரயன், பல உலக நாடுகளில் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் மத்திய, தென் அமெரிக்கா, தெற்காசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் கிருமித்தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை கூடி வருவதாகச் சொன்னார்.
முதல் கிருமித்தொற்று அலை ஓய்ந்த நாடுகளில் இவ்வாண்டு பிற்பகுதியில் மீண்டும் தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். முதல் அலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் அவசரமாக தளர்த்தப்பட்டால் தொற்று சம்பவங்கள் வேகமாக அதிகரிக்கக்கூடும் என அவர் கூறினார்.
“கிருமித்தொற்று சம்பவங்கள் எந்த நேரத்திலும் மீண்டும் அதிகரிக்கலாம். முதல் அலையில் தொற்று குறைந்து வந்தாலும் நிலவரம் தொடர்ந்து அதேபோல இருக்கும் என நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது,” என்று டாக்டர் ரயன் விவரித்தார்.
குறிப்பாக, வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பொது சுகாதார, சமூக இடைவெளி, கிருமித்தொற்று பரிசோதனை நடைமுறைகள் தொடர்ந்து நடப்பில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அப்போதுதான் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவதை உறுதிசெய்ய முடியும் என்றார் அவர்.
அண்மைக் காலமாக ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மலேரியா தடுப்பு மருந்தான ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயினை’ கொரோனா கிருமி பாதிப்புக்கு மருந்தாக கொடுப்பதையும் அது தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கொவிட்-19 நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுப்பதை நிறுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் நேற்று முன்தினம் கூறினார்.
கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மருந்தை தாம் உட்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த மருந்தை இந்தியாவிடமிருந்து அதிகளவில் அவர் வாங்கியிருந்தார்.
இதேபோல், கொரோனா பாதிப்பு லேசாக உள்ளவர்களுக்கு ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ உள்ளிட்ட மருந்துகளைக் கொடுக்கலாம் என்று பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சரும் கடந்த வாரம் கூறியிருந்தார்.
ஆனால், இந்த மருந்துகள் தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ‘லான்செட்’ சஞ்சிகை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.