லண்டன்: பிரிட்டனில் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கான கடைகள், பகுதிவாரிக் கடைகள், கடைத்தொகுதிகள் திறக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நடப்பில் உள்ள முடக்கநிலையைப் படிப்படியாக தளர்த்துவதன் ஒரு பகுதியாக அவர் இந்த அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டார்.
கொவிட்-19 பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில் வெளிப்புற சந்தைகளும் கார் விற்பனைக் கூடங்களும் அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் திறக்கப்படலாம் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். முடக்கநிலையின் காரணமாக பிரிட்டன் பொருளியல் மந்தநிலையில் உள்ளதால் அதை மீட்க திரு ஜான்சன் முனைப்பு காட்டி வருகிறார். அதேவேளையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் கிருமித்தொற்று அதிகரிக்குமோ என்ற அச்சமும் அவருக்கு உள்ளது.