பிரேசில்யா: கொரோனா கிருமித்தொற்றின் புதிய மையமாக தென் அமெரிக்க நாடுகள் உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
பெரு, சிலி, எல் சால்வடோர், குவாத்தமாலா மற்றும் நிகாரகுவா ஆகிய நாடுகளிலும் கிருமித்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது உலக சுகாதார அமைப்பை மேலும் கவலையடையச் செய்துள்ளது.
“நமது வட்டாரம் தொற்றின் புதிய மையமாக உருவெடுத்துள்ளது,” என்றார் தென் அமெரிக்க நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவரான கரிசா எட்டியென்.
தென் அமெரிக்க நாடுகள் கடுமையான வாரங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தென்அமெரிக்கச் சுகாதார அமைப்பின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஐரோப்பாவையும் அமெரிக்காவையும்விட லத்தீன் அமெரிக்காவில் அதிகமாக பதிவாகி வருகிறது.
பிரேசிலில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடைசியாக வெளியான தகவலின்படி 24 மணி நேரத்தில் 1,039 பேர் மாண்டனர். கிருமித்தொற்று தாக்கத்தில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் 391,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 24,512 பேர் மாண்டனர்.
கிருமித்தொற்றைவிட பொருளாதார வீழ்ச்சி அதிக இழப்பை ஏற்படுத்தும் என்று கூறும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ முடக்க உத்தரவை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், வரும் ஆகஸ்ட் மாதத்தொடக்கத்தில் அந்நாட்டில் உயிரிழப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்து, கிட்டத்தட்ட 125,000 பேர் மாண்டு போகக்கூடும் என்று அமெரிக்காவின் சுகாதார அளவீடுகள் ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.