சோல்: கொரோனா கிருமியுடன் தொடர்புடைய பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்தான புதிய அரிய வகை நோய்த்தொற்று தென்கொரியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்திற்கிடமான இரண்டு பிள்ளைகள், சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டு வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 வயது சிறுவன், 4 வயது சிறுமி இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சிதைக்கக்கூடிய எம்ஐஎஸ்-சி எனப்படும் குழந்தைகளைத் தாக்கும் அழற்சி நோயின் அறிகுறிகள் கவாசாகி நோய்க்கான அறிகுறியை போன்றிருக்கும். மேலும் காய்ச்சல், உடலில் சிவந்த தடிப்புகள், சுரப்பிகள் வீக்கம் போன்றவை தென்படும். மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய அழற்சி ஏற்படக்கூடும்.
கிருமித்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த மாத தொடக்கத்தில் முதலில் இந்நோய் பதிவாகத் தொடங்கியது.
எனவே கொரோனா கிருமிக்கும் இந்நோய்க்கும் தொடர்பிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, இணைய வர்த்தக கிடங்கின் ஊழியர்கள் 36 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று அங்கு 49 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏழு வாரங்களில் இது ஆக அதிக எண்ணிக்கையாகும்.