செய்திக்கொத்து (உலகம்) 28-05-2020

செய்திக்கொத்து (உலகம்) 28-05-2020

2 mins read
793054cc-734c-458c-9119-a593ad6b47bf
ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு இடையே பாதுகாப்பான விமானச் சேவையை தொடங்குவதற்கான திட்டம் ஜூன் மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்படும் என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். படம்: புளூம்பெர்க் -

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து விமானப் பயண அறிவிப்பு

வெலிங்டன்: கொரோனா கிருமியின் தாக்கம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மிகவும் குறைந்துள்ள நிலையில். இரு நாடுகளுக்கிடையிலான விமானச் சேவை குறித்து இருதரப்பும் ஆலோசித்து வருகின்றன.

கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்க மற்றும் விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உட்பட இரு நாடுகளின் வல்லுநர்களும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பான விமானச் சேவையை தொடங்குவதற்கான திட்டம் ஜூன் மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்படும் என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா: ஆக இளவயது ஆடவர் மரணம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக 30 வயது ஆடவர் ஒருவர் மாண்டார். அவர் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் பல வாரமாக இருந்தபோதும் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றுக்கு மாண்ட ஆக இளவயது நபர் இவர். இதையடுத்து ஆஸ்திரேலியாவில் 103 பேர் தொற்று காரணமாக மாண்டுவிட்டனர்.

மலேசியா: மதுபானக் கூடத்தில் 29 பேர் கைது

ஈப்போ: மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறி, மதுபான விடுதியில் கூடியிருந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாலான் லாவ் எக் சிங்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.25 மணியளவில் அந்த மதுபான விடுதியில் சோதனை மேற்கொண்டபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

அமெரிக்கா: ஒரு லட்சத்தைத் தாண்டியது உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் மாண்டனர்.

உலகளவில் கிருமித்தொற்றின் பாதிப்பு, உயிரிழப்பு இரண்டிலும் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைத் தாண்டியுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரமாக உள்ளது.