ஹாங்காங் மீது சீனா செயல்படுத்தவிருக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்த விவாதத்தில் அமெரிக்கா தலையிடவேண்டாம் என்று ஹாங்காங் கூறியுள்ளது.
பொருளியல் மையமான ஹாங்காங்கிற்கு அமெரிக்கா வழங்கியுள்ள சிறப்பு அங்கீகாரம் மீட்டுக்கொள்ளப்பட்டால் அது அமெரிக்கப் பொருளியலை பாதிக்கக்கூடும் என்றும் ஹாங்காங் எச்சரித்துள்ளது.
ஹாங்காங் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா செயல்படுத்தினால் அந்தப் பொருளியல் மையத்தின் சுதந்திரம் அகற்றப்படும் நிலை உருவாகிவிடும் என்ற அச்சத்தில் மேற்கத்திய நாடுகளும் ஜனநாயக ஆர்வலர்களும் உள்ளனர். சீனாவின் நடவடிக்கைக் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விரைவில் தமது கருத்துகளை வெளிப்படுத்துவார் என்று அறியப்படுகிறது.
இந்நிலையில் வர்த்தக ரீதியிலான தடைகளை அமெரிக்கா முன்வைத்தால் ஹாங்காங்கை பாதிக்கும் அதே சமயம் அமெரிக்கப் பொருளியலுக்கும் பாதிப்பு உண்டாகும் என்று நேற்று ஹாங்காங் அரசு கூறியுள்ளது.