பாரிஸ்: கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகளில் பத்தில் ஒருவர் ஒரே வாரத்தில் இருந்துவிடுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 1,300க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் நேற்று ‘டையபட்டோஜியா’ என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
மரணமடைவோரில் மூவரில் இருவர் ஆண்கள் என்றும் உயிரிழக்கும் ஆண், பெண் இருபாலருக்குமான சராசரி வயது 70 என்றும் ஆய்வு கண்டறிந்தது.
நீரிழிவு தொடர்பான உடல்நிலைக் கோளாறுகளும் மூப்படையும் வயதும் மரணத்துக்கான ஆபத்துகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
உயரத்துக்கேற்ற உடல் எடை குறியீட்டின் அளவு அதிகரிப்பது இரு அம்சங்களோடு தொடர்புடையது. காற்றோட்ட இயந்திரத் தேவை, மரணம் ஆகியவற்றுக்கான அதிகரிப்பே அந்த அம்சங்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.
மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 53 பிரான்ஸ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோருக்கு கண்பார்வை, சிறுநீரகம், நரம்புகள் ஆகியன பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதையும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், 40 விழுக்காட்டு நோயாளிகளுக்கு பெரிய இதய தமனி, மூளை, கால்கள் ஆகியவற்றிலும் பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்தது.
இவ்வாறு பலவித உடல்நிலைக் கோளாறுகளுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்படுவோர் ஏழு நாட்களுக்குள் மரணமுறும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
குறிப்பாக, 75 வயதைக் கடந்தோருக்கு 55 வயது அல்லது அதற்கும் குறைவான வயனதினரைக் காட்டிலும் 14 மடங்கு உயிரிழக்கும் அபயாத்தை எதிர்நோக்குகிறார்கள்.
“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழாவது நாளில் ஐந்தில் ஒரு நோயாளிக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. பத்தில் ஒரு நோயாளில் இறந்துவிடுகிறார். நான்கில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்புகிறார்,” என்று குறிப்பிடுகிறது ஆய்வறிக்கை.
நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் இன்சுலின், ரத்த சர்க்கரையை மட்டுப்படுத்தும் இதர வகை சிகிச்சைகள் ஆகியன கொவிட்-19க்கான தீவிரத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் அவற்றைத் தொடரலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.
உலகளவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறு மில்லியனை நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளன.