வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின ஆடவர் ஒருவரை மோசடி வழக்கு ஒன்றில் சந்தேகித்து போலிசார் கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு ஒத்துழைக்க மறுத்த அவரை காவலர் ஒருவர் முட்டியால் அவரது கழுத்தில் மிதித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
போலிசாரின் பிடியில் இருந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் உரிமைகளுக்கான தலைவர் மிஷல் பேஷ்லெட் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மோசமான முறையில் கொல்லப்படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று அவர் நேற்று முன்தினம் வலியுறுத்தினார்.
போலிசாரின் இந்த இரக்கமற்ற செயலுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
“அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலை இதுதான். கறுப்பாக இருப்பதற்காக குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நீண்டகாலமாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாங்கள் தற்போது நவீனகால கொலைகளை எதிர்கொள்கிறோம். அனைவரையும் சமமாக நடத்துவதற்கான வழியை காணாத வரை அமெரிக்கா எப்போதும் உயர்ந்த நாடாக மாறாது,” என்று வயோலா டேவிஸ் பதிவிட்டார்.
“இது நிறுத்தப்படவேண்டும். இது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இந்த மனிதரின் மரணம் எனது கோபத்தை தூண்டுகிறது. இனவெறி செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்,” ஜஸ்டின் பைபர் பதிவிட்டார்.
இந்நிலையில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்ததைத் தொடர்ந்து மினியபோலிஸ் நகரில் ஆங்காங்கே பெரியளவில் போராட்டம் வெடித்தது. இதில் சில இடங்களில் போலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏறப்பட்டது.
மினியபோலிஸ் நகரில் உள்ள போலிஸ் நிலையம் ஒன்றின் நுழைவாயிலில் தீவைத்துவிட்டு அந்நிலையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து நின்றனர்.