வாஷிங்டன்: கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்ட காரணத்தினால், உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கிருமிப் பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாகவும் சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறி, உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்துவதாக முதலில் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான நிதியையும் அமெரிக்கா நிறுத்திவிட்டது.
தொடர்ந்து உலக சுகாதார மையம், சீனாவின் கைப்பாவை போல் செயல்படுவதாக குற்றஞ் சாட்டி வந்த டிரம்ப், உலக சுகாதார அமைப்பின் தலைமைத்துவம் மற்றும் செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லையென்றால், நிரந்தரமாக நிதி முடக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்
போகிறோம்.
"இதனால் அவர்களுக்கு இனி நாங்கள் நிதி வழங்கமாட்டோம். உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியை வேறு நாடுகளுக்கும் அவசர பொது சுகாதாரத் தேவைகளுக்கும் பயன்படுத்த போகிறோம்.
"கிருமிப் பரவல் குறித்து சீனா உலகிற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும், அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்," என்றார். இதற்கிடையே, டிரம்ப்பின் இந்த அறிவிப்பை அமெரிக்க சுகாதார நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக நாடுகளை ஒன்றிணைக்க முயன்று வரும்போது, டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, அந்த முயற்சிக்கு விழுந்த அடியாகும் என்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியர் லாரன்ஸ் கோஸ்டின் கூறினார்.