வாஷிங்டன்: நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும் அதைத் தொடர்ந்த வன்முறைகளும் அமெரிக்காவில் வலுத்து வருவதால், முக்கிய நகரங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
மினியபோலிஸ் நகர போலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பின ஆடவரான 46 வயது ஜார்ஜ் ஃப்ளாயிட் என்பவரின் கழுத்தில், தன்னுடைய முட்டியால் மிதித்த காணொளி காட்சி பரவிக் கொண்டிருந்தபோது, அந்த ஆடவரின் மரணச் செய்தி அமெரிக்காவை உலுக்கியது.
அதைத் தொடர்ந்து கறுப்பினத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.
ஆங்காங்கே வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின. காவல் நிலையம் தீக்கிரையானது. கடைகள் சூறையாடப்பட்டன. வாகனங்கள் சாம்பலாயின. ஐந்து நாட்களுக்கு முன்னர் மினியபோலிசில் துவங்கிய ஆர்ப்பாட்டமும் வன்முறையும் தற்போது 17 நகரங்களுக்குப் பரவியுள்ளது.
சனிக்கிழமையன்று டல்லாஸ், சிகாகோ, சியாட்டில், சால்ட் லேக் சிட்டி மற்றும் கிளீவ்லேண்ட் ஆகிய நகரங்களிலும் மக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதல் பெருகி வரும் நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மினியபோலிசில் தேசிய காவல் படையினர் களமிறக்கப்பட்டனர்.
இதுபற்றி பேசிய மினசொட்டா ஆளுநர் டிம் வால்ட்ஸ், “ஃப்ளாயிட்டின் மரணத்திற்கு எதிரான போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற கலகக்காரர்கள் குழப்பத்தை விளைவிக்க முயல்வதால், தேசிய பாதுகாப்பு படையினர் களமிறக்கப்படுவது அவசியம்,” என்றார்.
லாஸ் ஏஞ்சலஸில் ‘கருப்பர் உயிர்கள் முக்கியம்’ என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. போலிசார் தடியடி நடத்தினர். ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
வன்முறை தீயாய் பரவி வரும் 25 முக்கிய அமெரிக்க நகரங்களில் இரவு எட்டு மணிக்கு மேல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களில் இதுவரை 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பேசிய டிரம்ப், ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் மரணம் மிகவும் சோகமானது என்று தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் எதற்கும் வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்றும் வன்முறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.