மினசொட்டா: மினியபோலிசில் சனிக்கிழமையன்று ஊரடங்கு நேரத்தில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தினர். அப்போது அந்த குண்டுகள் பட்டு இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் காயமடைந்தனர்.
கேமராமேன் ஜூலியோ-சீசர் சாவேஸ் என்ற அந்த செய்தியாளர் எடுத்த காணொளியில், போலிஸ் அதிகாரி ஒருவர் அவரை நேரடியாக குறி வைக்கும் காட்சி பதிவானது.
“அந்த போலிஸ் அதிகாரியை நான் படமெடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் தனது ரப்பர்-குண்டு துப்பாக்கியை நேராக என்னை நோக்கி திருப்பினார்,” என்று திரு சாவேஸ் கூறினார்.
சில நிமிடங்களில், சாவேஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் பாதுகாப்பு ஆலோசகர் ரோட்னி செவார்ட் இருவரும் ரப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்துப் பதிலளித்த மினியபோலிஸ் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் எல்டர் அக் காணொளியின் நகலைத் தருமாறு கோரியுள்ளார். அவர் உடனடியாக வேறு எதுவும் கூறவில்லை.
தாங்கள் செய்தி ஊடக உறுப்பினர்கள் என்பது தெளிவாக தெரியும்படி செய்தியாளர்கள் தங்களது அடையாள அட்டையையும் செய்தியாளர் என்ற அடையாளத்துடன் கூடிய குண்டு துளைக்காத ஆடையையும் அணிந்திருந்தனர்.
வெள்ளிக்கிழமையன்று நடந்த மற்றோர் சம்பவத்தில் ஆர்ப்பாட்டக் காரர்கள் கைது செய்யப்பட்டபோது, சிஎன்என் ஊடக செய்தியாளர் ஒருவரையும் போலிசார் கைது செய்தனர்.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அவரது கைதுக்கு மினசொட்டா ஆளுநர் மன்னிப்பு கோரியிருந்தார்.