தோக்கியோ: தாய்லாந்து, வியட்னாம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், அந்நாடுகளில் இருந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ஜப்பான் பரிசீலித்து வருவதாக ஜப்பானின் யோமியூரி நாளிதழ் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் விரைவில் இந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் நாடுகளில் இருந்து கிளம்புவதற்கு முன்னர், கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதற்கான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.
அதன் பிறகு ஜப்பானுக்குள் நுழையும்போதும் அவர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சீனாவில் இருந்து வருபவர்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ஜப்பான் அரசாங்கம் எச்சரிக்கையாக உள்ளது.
ஏனெனில் எந்தவொரு விரைவான அனுமதியும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் தென்கொரியாவில் கிருமிப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதிலும் ஜப்பான் கவனமாக உள்ளது.