கொழும்பு: ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளி உத்தரவையும் பொருட்படுத்தாமல், மறைந்த தொழிற்சங்கத் தலைவரான ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு மரியாதை செலுத்த சனிக்கிழமையன்று மக்கள் திரண்டதையடுத்து, கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் தோட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி அமைச்சருமான 55 வயது ஆறுமுகன் தொண்டமான் கடந்த செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.
தொண்டமானின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
அரசாங்க மருத்துவர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் அதிகமாக கூடுவதால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையை குலைக்கக்கூடும் என்றும் கிருமித்தொற்றின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்கக்கூடும்," என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனவரி மாதம் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதில் இருந்து சுமார் 1,559 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 10 பேர் மாண்டுவிட்டனர்.