வாஷிங்டன்: அமெரிக்காவில் காவலரின் கட்டுப்பாட்டில் இருந்த கறுப்பின ஆடவர் ஒருவர் மரண மடைந்ததால் மூண்டுள்ள கலவரம் நேற்று முன்தினம் இரவு 6வது நாளாக தொடர்ந்தது. இதையடுத்து நாற்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவை சீனா எள்ளி நகையாடி வருகிறது.
ஹாங்காங்கில் வன்முறைகள் நடந்தபோது அது, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது என்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை யின் சபாநாயகர் நான்சி பெலோசி வருணித்திருந்தார்.
இதனை சுட்டிக்காட்டியுள்ள சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளேடு, “அமெரிக்காவில் உள்ள அரசியல்வாதிகள் தற்போது அங்கு நடக்கும் கண்கொள்ளாக் காட்சியை கண்டு ரசிக்கலாம் என்று கூறியுள்ளது.
அமெரிக்கா கபட நாடகமாடு வதாகக் கூறியுள்ள சீனாவின் மற்ற ஊடகங்களும் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்து டுவிட்டரி லும் இதர சமூக ஊடகங்களிலும் கருத்துகளை வெளியிட்டு வரு கின்றன.
“அமெரிக்க அதிபர் அவர்களே, ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துங்கள். ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சு நடத்துங்கள் என்று நீங்கள் பெய்ஜிங்கிடம் கூறியதைப் போல நீங்களும் இப்போது பேச்சுவார்த்தை நடத்தலாம்,” என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் அவரது ஆதர வாளர்கள் ‘டுவிட்டர்’ பதிவில் கிண்டலடித்துள்ளனர்.
மற்றொரு பதிவில் அமெரிக்கா, ஹாங்காங் ஆகிய இரு இடங்களிலும் நடைபெற்றுள்ள கலவரம் சட்டத்தை மீறியதாகும். அழிவை ஏற்படுத்தக் கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவில் கலவரங்களைக் கட்டுப்படுத்த நாற் பது நகரங்களில் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதனை மக்கள் மதிப்பதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டன. போலிஸ் கார்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
நியூயார்க், சிகாகோ, ஃபில டெல்ஃபியா, லாஸ் ஏஞ்சலிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கலவரத் தடுப்பு போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் மிளகுத் தூளைத் தூவியும் ஆர்ப்பாட்டக் காரர்களை கலைக்க முயற்சி செய்தனர்.
அப்போதும் ஆர்ப்பாட்டத்தை போலிசாரால் கட்டுப்படுத்த முடிய வில்லை. இந்த நிலையில் தலை நகர் வாஷிங்டன் உட்பட 15க்கும் மேற்பட்ட நகரங்களில் 5,000 பேருக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை கலவரத்தடுப்புப் போலிசார் கண்ணீர்ப்புகைகுண்டுகளையும் எறிகுண்டுகளையும் வீசியபோது அசைந்து கொடுக்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிஸ் வாகனங்களை அடித்து நொறுக் கினர்.
ஃபிலடெல்ஃபியா தொலைக் காட்சியில் காட்டப்பட்ட காட்சி யொன்றில் போலிஸ்கார்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்குவதையும் ஒரு கடையில் உள்ள பொருட்களை பலர் சூறை யாடுவதையும் காண முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில் போலிஸ் காவலில் ஃபிளாய்ட் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற மின்னியா போலிஸ் நகரத்தில் முக்கிய நெடுஞ் சாலையில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக் காரர்களிடையே லாரியை ஓட்டிய லாரி ஓட்டுநரை போலிசார் கைது செய்துள்ளனர்.
லாரி வேகமாக வந்ததால் ஆர்ப் பாட்டக்காரர்கள் அங்குமிங்கும் அதிர்ச்சியில் ஓடினர். ஒரு கட்டத்தில் லாரியை தடுத்து நிறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் லாரி ஓட்டுநரை வெளியே இழுத்துப் போட்டனர். பின்னர் அவரை போலி சாரிடம் ஒப்படைத்தனர். லாரி ஓட்டு நருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. லாரி ஓட்டுநரின் நோக்கம் புரியவில்லை என்று மின்னசோட்டாவின் ஆளுநர் டிம் வால்ட்ஸ் கூறியிருந்தார்.
கடந்த மாதம் 25ஆம் தேதி போலி 20 டாலர் நோட்டை ஜார்ஜ் ஃபிளாய்ட் கொடுத்ததாக கடைக் காரர் ஒருவர் போலிசாருக்குத் தகவல் கொடுத்ததால் அங்கு வந்த போலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது ஜார்ஜ் ஃபிளாய்டின் கழுத்து மேல் போலிஸ்காரர் ஒருவர் முட்டிக்காலை வைத்து அழுத்திப் பிடித்திருந்தார். ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுவிட முடியவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியும் போலிசார் அழுத்திய காலை எடுக்காததால் அவர் மரண மடைந்தார்.
இந்தச் சம்பவத்தால் அமெரிக்கா முழுவதும் கலவரம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கலவரம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது.