சென்னை: சென்னை மாநகரில் போதுமான அளவில் தண்ணீர் இருப்பு உள்ளதால், இனி இந்த ஆண்டு முழு வதும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் என்றாலே தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடத் தொடங்கிவிடும். காலிக் குடங்களுடன் மக்கள் தண்ணீரைத் தேடி அலைவதையும் காணமுடியும்.
இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா அச்சறுத்தலும் சேர்ந்து கொண்டதால் தண்ணீர்ப் பிரச்சினையைச் சமாளிக்கமுடியுமா என்ற பயம் நிலவி வந்தது.
ஆனால், கொரோனா தாக்கம் சென்னை நகர மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை சிறிய பிரச்சினையாக்கி விட்டது. பெரிய பேரங்காடிகள், ஓட்டல்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டதால் குடிநீர் தேவை பெருமளவில் குறைக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகரில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்துதான் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர வீராணம், மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் மையங்களில் இருந்தும் பெறப்படும் தண்ணீர் குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் ஏரிகளில் போதுமான தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநில அரசு 500 மில்லியன் கன அடி நீரைத் திறந்துவிட சம்மதம் தெரிவித்து, தற்போது நிமிடத்துக்கு 380 கன அடி நீர் வீதம் திறந்துவிடப்பட்டு வருகிறது.
தற்போது இருப்பில் இருக்கும் தண்ணீர், ஆந்திர மாநில அரசு திறந்து விட்டுள்ள தண்ணீர் மூலம் இந்த ஆண்டு முழுவதும் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.