வாஷிங்டன்: அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்களும் மேயர்களும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரத் தவறினால், வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மினசொட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 26ஆம் தேதி கறுப்பின ஆடவரான ஜார்ஜ் ஃபிளாயிட் என்பவர் போலிஸ் ஒருவரால் முட்டியால் மிதித்துக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக மக்கள் போராட்டங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பல ஆண்டுகளாக அடக்குமுறையை சந்தித்து வருவதால் நிறவெறிக்கு எதிரான இந்த போராட்டம் வலுவடைந்து வருகிறது.
பல இடங்களில் கலவரம், வன்முறை, தீவைப்பு, பொருட்கள் சூறை என நீண்டு கொண்டே செல்லும் நிலையில், அதிபர் டிரம்ப் போராட்டக்காரர்கள் அத்துமீறுவதை தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது என கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் அதிகாரத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார்.
"ஆளுநர்கள் அமைதியைக் கொண்டுவராவிட்டால், அமெரிக்க நகரங்களில் ஆயிரக்கணக்கில் ராணுவத்தை இறக்கிவிடுவேன்,” என டிரம்ப் மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.
இவ்வாறு பேசிய டிரம்புக்கு ஹூஸ்டன் காவல்துறை தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இந்த நாட்டின் உயர் போலிஸ் அதிகாரியாகக் கேட்டுக் கொள்கிறேன் அதிபர் ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவும்.
"இப்போது ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெறும் காலம் அல்ல, இது மக்கள் இதயங்களையும் மனங்களையும் வென்றெடுக்க வேண்டிய காலம்," என்றார்.
இதற்கிடையே, சுமார் 200 முதல் 250 ராணுவ வீரர்கள் வாஷிங்டன் நகர வீதிகளில் இன்று காலைக்குள் நிறுத்தப்படுவர் என்று கூறப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பு பணியில் மட்டுமே ஈடுபடுவார்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யவோ, சட்ட அமலாக்க நடவடிக்கைகளிலோ ஈடுபடமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.