ஹாங்காங்: வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாகச் சாடியுள்ளார் ஹாங்காங் தலைவர் கேரி லாம்.
"கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கலவரங்கள் நடப்பது அனைவருக்கும் தெரியும். உள்ளூர் அரசாங்கங்கள் அதை எவ்வாறு கையாண்டன என்பதையும் நாம் பார்க்கிறோம்.
"ஆனால், ஹாங்காங்கில் இதேபோன்ற வன்முறைகள் நடந்தபோது அவர்கள் அப்போது எந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் நமக்கு தெரியும்.
"இது வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டைத் தெளிவாக காட்டுகிறது," என்று கூறினார் கேரி லாம்.
கடந்த ஆண்டு முழுவதும் ஹாங்காங் கலவரத்தால் நிலை குலைந்து போனது.
அப்போது கலவரத் தடுப்பு போலிசார் கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தினர். தடியடி நடத்தினர்.
வன்முறையை கட்டுப்படுத்த ஹாங்காங் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை வாஷிங்டன் கடுமையாக விமர்சித்து இருந்தது.
மேலும் சீன தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தால், ஹாங்காங்கின் சிறப்பு தகுதியை ரத்து செய்வதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கையை டிரம்ப் கையாண்டால் அது அவருக்கு சுய தோல்வியைத் தரும் என்று கூறியுள்ளார் கேரி லாம்.