லண்டன்: குறைந்தது ஒரு மீட்டர் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது, கண் பாதுகாப்பு ஆகியவை கொவிட்-19 கிருமித்தொற்றும் அபாயத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழிகள் என்று கொரோனா கிருமி பரவல் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர அடிக்கடி கை கழுவுதல் மற்றும் நல்ல சுகாதாரம் பேணுதல் ஆகியவை முக்கியமானவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
என்றாலும் அந்த நடவடிக்கைகள் அனைத்தும்கூட கொரோனா கிருமித்தொற்று அபாயத்தில் இருந்து முழுமையான பாதுகாப்பை அளிக்காது என்றும் கூறப்படுகிறது.
16 நாடுகளில் நடத்தப்பட்ட 172 ஆய்வுகளின் ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட மதிப்பாய்வின் முடிவுகள் 'தி லான்செட்' சஞ்சிகையில் திங்களன்று வெளியிடப்பட்டது.
"நோய்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பொதுவான மற்றும் எளிமையான பரிந்துரைகளை வழங்குவது ஆய்வின் நோக்கம் என்றார் ஆய்வின் இணைத் தலைவரான மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஹோல்கர் ஷேன்மேன்.
குறைந்தது 1 மீட்டர் சமூக இடைவெளி கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்கிறது என்றும் 2 மீட்டர் தூரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். முகக்கவசம், கண் பாதுகாப்பு உறைகளால் இன்னும் நல்ல பலன் கிடைக்கக்கூடும்.
மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான டெரெக் சூ, "முகக்கவசம் அணிவது என்பதை சமூக இடைவெளி, கைகளை கழுவுவது போன்றவற்றுக்கு மாற்றாக கருதக்கூடாது," என்றார்.