வாஷிங்டன்: அமெரிக்காவில் நீடித்த வன்முறைகளுக்கு நடுவே, எட்டாவது நாள் போராட்டத்தை மக்கள் அமைதியாகவும் உணர்ச்சி வசப்பட்டாலும் முன்னெடுத்து சென்றனர்.
கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபிளாயிட் போலிஸ் பிடியில் இருக்கும்போது தாக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மினியபோலிசில் தொடங்கிய அந்த போராட்டம் பெரும்பாலான அமெரிக்க நகரங்களுக்கும் பரவியது.
சில இடங்களில் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் மக்கள் ஊரடங்கையும் மீறி, ஆர்ப்பாட்டங்களிலும் வன்முறையிலும் ஈடுபட்டதால் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர்.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி எட்டாவது நாளான நேற்று அமெரிக்காவின் பெரும்பாலான இடங்களில் மக்கள் அமைதிப் பேரணியை மேற்கொண்டனர்.
குறிப்பாக இரவு நேரத்தில் மக்கள் ஊரடங்கை மீறி திரண்டாலும் பேரணி அமைதியாக நடைபெற்றது.
பிலடெல்பியா, அட்லாண்டா, டென்வர் மற்றும் சியாட்டடிலிலும் பேரணிகள் நடந்தன.
ப்ரூக்ளின், சிகாகோ, போர்ட்லாண்ட் ஆகிய இடங்களில் நிறவெறிக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி மக்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கை மீறியவர்கள் லாஸ் ஏஞ்சல்சில் கைது செய்யப்பட்டனர். நியூயார்க்கில் ஒரு சில கடைகள் சூறையாடப்பட்டன.
என்றாலும் நேரம் செல்ல செல்ல அங்கும் அமைதி நிலவத் தொடங்கியதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
ஆர்ப்பாட்டங்களை நேரடி ஒளிபரப்பாக காண்பித்து வந்த தொலைக்காட்சி ஒளிவழிகளும் வழக்கமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கின.