ரியோ டி ஜெனிரோ: கிருமித்தொற்றின் புதிய மையமாகவுள்ள பிரேசிலில் ஒரே நாளில் ஆக அதிகமான உயிரிழப்பு பதிவானது.
நேற்று முன்தினம் இங்கு 1,262 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 31,999ஆக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 555,383ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் ஆக அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“கிருமித்தொற்றின் பாதிப்பும் உயிரிழப்பும் பிரேசிலில் இன்னும் மோசமடையக்கூடும் என்றும் ஆனால் தற்போதைய சூழலில் எப்போது மோசமடையக்கூடும் என்பதைக் கணிக்கமுடியவில்லை,” என்றார் உலக சுகாதார அமைப்பின் அவசர திட்டங்களின் நிர்வாக இயக்குநரான டாக்டர் மைக்கேல் ராயன். சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் நாட்டை முடக்குவதையும் எதிர்த்து வந்த அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, பொருளாதார வீழ்ச்சியை குறைக்க மக்கள் மீண்டும் வேலைக்கு வருமாறு அழுத்தம் கொடுக்கிறார்.