லண்டன்: ஹாங்காங்கில் சீனா தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவதை பிரிட்டன் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அச்சட்டத்தை கொண்டு வரும் திட்டத்தில் இருந்து சீனா பின்வாங்காது என்று கூறியுள்ளார் ஹாங்காங் தலைவர் கேரி லாம்.
இச்சட்டம் தொடர்பான ஆலோசனைக்காக சீனாவிற்கான பயணத்தின்போது அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே, ஹாங்காங்கின் சுதந்திரத்தைப் பறிக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தால், கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ஹாங்காங் குடிமக்களுக்கு பிரிட்டன் அடைக்கலம் தரும் என்று கூறியுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
தேசத்துரோகம், பிரிவினை, பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு தலையீட்டைக் கட்டுப்படுத்த ஹாங்காங்கிற்காகச் சட்டங்களை உருவாக்கும் முடிவுக்கு சீன நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
சீனா கொண்டு வரும் புதிய சட்டம் ‘ஹாங்காங்கின் சுதந்திரத்தைப் பறித்துவிடும்’ என்றும் பிரிட்டனுடனான ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் ஜான்சன் கூறினார்.
சீனா தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர பிடிவாதம் பிடித்தால், பி.என்.ஓ எனப்படும் சிறப்பு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹாங்காங் மக்கள் 12 மாதங்கள் வரை விசா இல்லாமல் பிரிட்டனில் தங்குவதற்கு ஏற்ற வகையில் குடிநுழைவு விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
மேலும் அவர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வழிவகுக்கக்கூடிய, குடியேற்ற உரிமைகள், வேலை செய்யும் உரிமை ஆகியவையும் வழங்கப்படும் என்றார்.