அமெரிக்காவில் திரு ஜார்ஜ் ஃபிளாயிட், 46, என்ற கறுப்பின ஆடவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு போலிஸ் அதிகாரிகள் நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
கைவிலங்கிடப்பட்ட திரு ஜார்ஜ் ‘தன்னால் மூச்சுவிட முடியவில்லை’ எனக் கெஞ்சியும் அவரது கழுத்தில் தனது முழங்காலைக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் அழுத்தியபடி இருந்த மினியபோலிஸ் போலிஸ் அதிகாரி டெரிக் சௌவின் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
“மினசோட்டா தலைமைச் சட்ட அதிகாரி கீத் எலிசன், டெரிக் சௌவின் மீதான குற்றச்சாட்டை இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டாக உயர்த்தியுள்ளார். அவருடன் இருந்த மற்ற அதிகாரிகள் மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது, நீதியை நிலைநாட்ட எடுத்து வைக்கப்பட்ட அடுத்த முக்கியமான அடி,” என்று அமெரிக்க செனட்டார் ஏமி குளோபுச்சர் டுவிட்டர் வழியாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் அவர் மீது மூன்றாம் நிலை, அதாவது நோக்கமற்ற கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின்படி, சௌவின் திட்டமிட்டுக் கொலை செய்ததாகக் கருதப்படாது என்றாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
மற்ற மூவரும் கொலைக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருப்பதை நீதிமன்ற ஆவணங்கள் காட்டின.
கடந்த மாதம் 25ஆம் தேதி திரு ஜார்ஜ் இறந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் போலிசையும் இன வெறியையும் எதிர்த்து பல நாட்களாகப் போராட்டம் நடந்து வருகிறது. திரு ஜார்ஜ் கள்ள நோட்டைக் கொடுத்து சிகரெட் வாங்க முயன்றதாக போலிஸ் சந்தேகித்தது.
ஜார்ஜுக்குக் கிருமித்தொற்று
இதனிடையே, திரு ஜார்ஜ் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தது கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டதாக அவரது உடற்கூறு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆயினும், அவரது நுரையீரல் நன்றாக இருந்ததாகத் தோன்றுவதாகவும் இதயத்திற்குச் சென்ற இரத்தக்குழாய் சற்று குறுகியிருந்ததாகவும் அந்த 20 பக்க அறிக்கை கூறுகிறது. போலிஸ் அதிகாரிகள் திரு ஜார்ஜைப் பிடித்துத் துன்புறுத்தியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அந்த அறிக்கை, அவரது மரணத்தைக் கொலை என்றும் வகைப்படுத்தியுள்ளது.