நியூயார்க்: அமெரிக்காவின் பொது சுகாதார துறையில் நிலவும் இனவாதத்தைக் கண்டிக்கும் விதமாக நியூயார்க் தாதியர்களும் மருத்துவர்களும் ஜார்ஜ் ஃபிளாயிட் மரணத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர்.
முகக்கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகள் ஆகியவற்றை அணிந்த சுமார் நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள், அமெரிக்காவில் இயல்பாகிவிட்ட இன பாகுப்பாட்டை எதிர்த்து, மென்ஹாட்டனில் உள்ள பெல்லூவ் மருத்துவமனைக்கு வெளியே பேரணி சென்றனர்.
இந்த போராட்டத்தில் நியூயார்க்கில் உள்ள ஆறு மருத்துவமனைகள் கலந்துகொண்டன.
பெல்லூவ் மருத்துவமனையில் அவசர பிரிவு மருத்துவராக பணியாற்றுபவரும் இப்பேரணியை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவருமான மருத்துவர் காமினி துபே, “அனைத்து சமூகத்தினருக்கும் சேவை செய்வோம் என்று உறுதி மொழி எடுத்துள்ளோம்.
“தற்போதைக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தும் போலிசாரின் முரட்டுத்தனம் தான் பொது சுகாதாரத் திற்கான அவசரநிலை,” என்று கூறினார்.
“கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக போராடும் அதே வேளையில் இனவாத கிருமிக்கு எதிராகவும் போராடுகிறேன்,” என்றார் கறுப்பின தாதியான பெல்லி ஜீன்.
அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் கறுப்பினத்தவர்கள் வெறும் 13.4 விழுக்காட்டினரே என்ற நிலையில், கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 23 விழுக்காட்டினர் கறுப்பினத்தவர் என்கிறது அதிகாரபூர்வ தகவல்.
நியூயார்க்கில் வெள்ளை இன மக்களைவிட இரு மடங்கு கறுப்பின மக்கள் கிருமித்தொற்றுக்கு பலியாகினர்.
பெரும் செல்வந்தர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த சிகிச்சைகள், ஏழை மக்களுக்குக் கிடைப்பதில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கறுப்பின ஆடவரின் கழுத்தில் மினியபோலிஸ் போலிஸ்காரர் ஒருவர் முட்டியால் மிதித்தார்.
சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 26ஆம் தேதி மருத்துவமனையில் மாண்டதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் இனவாதத்திற்கு எதிரான போாராட்டங்கள் வெடித்தன.