மலேசியா: பெர்சத்து கட்சியின் செயல் தலைவராக பிரதமர் முகைதீன் யாசின்
புத்ரஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மற்றும் இதர நால்வரின் உறுப்பினர் தகுதி நீக்கப்பட்டுவிட்டதாக நேற்று முன்தினம் இரவு நடந்த பெர்சத்து கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. மகாதீர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து. முகைதீன் யாசின் செயல் தலைவராக முன்மொழியப்பட்டதை உச்சமன்றக் குழு அங்கீகரித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.
மலேசிய பிரதமர்: 35 பில்லியன் ரிங்கிட் பொருளியல் ஊக்குவிப்பு திட்டம்
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று பரவலினால் பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து நேற்று 35 பில்லியன் ரிங்கிட் (11.4 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) பொருளியல் ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்தார். இந்த நிதியின் சம்பள உதவித் திட்டத்தின் கீழ் 200 பேருக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தாவில் பள்ளிவாசல்கள் திறப்பு
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் சென்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் இந்தோனீசியா முடக்கப்பட்டது. ஆனாலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையாத நிலையில், வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது உள்ளிட்ட தளர்வுகளை ஜகார்த்தா ஆளுநர் வியாழனன்று அறிவித்தார்.
போராட்டத்திற்கு பாரிஸ் தடை
பாரிஸ்: ஜார்ஜ் ஃபிளாயிட் மரணம் தொடர்பாக பிரான்சில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் நடைபெறவிருந்த
போராட்டத்திற்கு பிரெஞ்சு போலிசார் தடை விதித்துள்ளனர். கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றுவது சிரமம் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
சீனாவில் கத்திக்குத்து; மூவர் பலி
பெய்ஜிங்: சீனாவின் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர். ஏழு பேர் காயமடைந்தனர். தென்கிழக்கு சீனாவின் கிராமப்புற பகுதி
யில் நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 35 வயது ஆடவர் பின்னர் புஜியன் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமையன்று, சீனாவின் குவின்சி சுஹாங் மாநில ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 37 மாணவர்கள், இரண்டு பணியாளர்கள் காயமடைந்தனர்.