புதிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை
பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய ஊக்குவிக்க வேண்டும் என்று நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து இருக்கிறது.
பொது இடங்களில் கொவிட்-19 கிருமி தொற்றும் அபாயமுள்ளதால் முகக்கவசம் அணிவது அந்த நோய்ப் பரவலைக் குறைக்க உதவும் என சுகாதார நிறுவனம் தனது புதிய வழிகாட்டி நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளது.
அண்மைய வாரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், கொரோனா கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும் பலவிதமான சாதனங்களில் முகக்கவசமும் ஒன்று என்றும் அது தவறான பாதுகாப்பு உணர்வைத் தருவதில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
அதே நேரத்தில், “முகக்கவசம் மட்டுமே ஒருவரை கொரோனா கிருமி தொற்றுவதில் இருந்து பாதுகாத்துவிடாது,” என்று சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
நிறுவனத்தின் கொவிட்-19 தொழில்நுட்பத் தலைமை நிபுணர் மரியா வான் கெர்கோவ், “பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லும்படி ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். அதிலும் குறிப்பாக, மருத்துவ முகக்கவசம் அல்லாது, துணியாலான முகக்கவசத்தை அணியும்படி பரிந்துரைக்கிறோம். முகக் கவசத்தை முறையாக அணிவது ஒரு தடுப்பரணாக விளங்கும். கிருமித்தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் சிறு துளிகள் நம்மை அண்டவிடாமல் முகக்கவசம் பாதுகாக்கும் என்பதைப் புதிய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன,” என்று விளக்கினார்.
பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவதை சில நாடுகளும் அமெரிக்க மாநிலங்களும் பரிந்துரைத்து உள்ளன அல்லது கட்டாயமாக்கி இருக்கின்றன.
ஆயினும், ஆரோக்கியமானவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசங்களை அணிவதன் மூலம் கொரோனா தொற்றாமல் தடுக்க முடியும் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை என சுகாதார நிறுவனம் முன்னதாகக் கூறியிருந்தது.
அத்துடன், உடல்நலம் குன்றியவர்களும் அவர்களைப் பராமரித்து வருவோரும் மருத்துவ முகக்கவசங்களை அணியுமாறு அது எப்போதும் பரிந்துரைத்து வந்தது.
இம்மாதம் 15ஆம் தேதி முதல் பேருந்து, ரயில், விமானம் மற்றும் படகுப் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என பிரிட்டன் அறிவித்துள்ளது.