அமெரிக்காவில் இனவெறிச் செயல்களுக்கு எதிரான பேரணிகள் நேற்று12வது நாளாக தொடர்ந்தன. அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலம், மினியபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் ஃப்ளாய்ட் எனும் கறுப்பின ஆடவர் போலிஸ் தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.
போலிஸ் அதிகாரி ஒருவர் தமது முட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களாக திரு ஃப்ளாய்டின் கழுத்தை நெரிப்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது. இந்தத் துன்புறுத்தல் செயலால் திரு ஃப்ளாய்ட் உயிரிழந்தார். போலிசாரின் இந்த இனவெறிச் செயல் நாடு முழுவதும் பெரியளவில் போராட்டங்களைத் தூண்டியது.
திரு ஃப்ளாய்டின் படுகொலைக்குக் காரணமான போலிஸ் அதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. திரு ஃப்ளாய்ட் துன்புறுத்தப்பட்டபோது சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியுடன் உடனிருந்த மற்ற மூன்று போலிஸ் அதிகாரிகளும் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர். திரு ஃப்ளாய்டை துன்புறுத்திய அதிகாரிக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் பேரணியாகச் சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே திரள்வதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
நியூயார்க், சிக்காகோ, லாஸ் ஏஞ்சலிஸ், சான் ஃபிரான்சிஸ்கோ உள்ளிட்ட பெரு நகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதி கேட்டு பேரணியாகச் சென்றனர்.
திரு ஃப்ளாய்ட் பிறந்த வட கரோலினா நகரில் மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, இனவெறி எதிர்ப்புப் பேரணிகள் பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளன. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள நாடாளுமன்றச் சதுக்கத்தில் பெருமளவில் மக்கள் திரண்டனர். கொரோனா கிருமி பரவும் அபாயம் காரணமாக மக்கள் ஒன்றுகூட வேண்டாம் என பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோரிக்கையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பர்ன், பிரிஸ்பன் ஆகிய நகரங்களிலும் பெரியளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்நாட்டில் பழங்குடியினர் பாகுபாட்டுடன் நடத்தப்படும் விதம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.