கோலாலம்பூர்: மலேசியாவில் 18 வயதானவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் வாக்காளர்களாக இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பதினெட்டு வயதானவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் வலுத்துவரும் வேளையில் ஆணையத்தின் தலைவர் அஸார் அஸிஸான் ஹாருன் விளக்கமளித்துள்ளார்.
"தேர்தல் ஆணையத்தின் ஆயத்த வேலைகள் முடிந்த பிறகு தானியக்க வாக்காளர் பதிவின்போது 18 வயதான அனைவரையும் வாக்காளராகப் பதிவு செய்யும் நடவடிக்கை தொடங்கும்.
"அேதாடு வாக்காளர் பதிவு திருத்தச் சட்டமும் இதர விதிமுறைகளும் அமலாக்கப்படும்," என்று ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டது. அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய திரு அஸார், அதுவரை அண்மைய நடவடிக்கைகள் பற்றி அறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும் என்றார்.
இதற்கிடையே www.spr.gov.my எனும் இணையப்பக்கம், ஃபேஸ்புக் அல்லது 03-8892 7200 எனும் தொலைபேசி வழியாக பொதுமக்கள் அண்மைய விவரங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வாக்காளர் வயது வரம்பை 21லிருந்து 18 வயதுக்குக் குறைக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அப்போது 18 வயதானவர்களின் பெயர்களை தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது மலேசியாவில் 15 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

